காரைக்கால் அம்மையார் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்


காரைக்கால் அம்மையார் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 4 May 2025 10:15 PM (Updated: 5 May 2025 7:19 AM)
t-max-icont-min-icon

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

காரைக்கால்,

காரைக்காலில் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு (2024) அக்டோபர் 21-ந்தேதி பாலாலயம் மற்றும் திருப்பணி தொடங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து திருப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் கோவில் வளாகத்தில் யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டது. இங்கு கடந்த 30-ந்தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. 1-ந் தேதி மாலை முதற்கால பூஜையும், அதனை தொடர்ந்து கடந்த 2, 3-ந்தேதி காலை, மாலையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

நேற்று காலை 6-வது கால யாகபூஜை, பூர்ணாகுதி, கடம்புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 8 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க விமான சலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாயா... ஓம் நமச்சிவாயா... என எழுப்பிய பக்தி கோஷம் விண்ணதிர செய்தது.

தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story