கரூர்: சிவன் கோவில்களில் சிவராத்திரி வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர்
சிவராத்திரி சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டம் நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேகபாலீஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், விபூதி, திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மேகபாலீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பாகவல்லி அம்பிகை, சமேத மேகபாலீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் புன்னம்சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாயகி உடனுறை புன்னைவனநாதர் கோவில், குந்தாணி பாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோவில் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு, சிவபெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






