

ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இன்று அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் மூலவருக்கு தங்க கீரிடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
இரவு 7 மணிக்கு உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்கிறார். பின் ரதவீதியில் ஒரு முறை வலம் வந்து உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
கிருத்திகை விழாவையொட்டி காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து, பொதுவழியில் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் ஒன்றரை மணி நேரம் வரிசையில் நின்று மூலவரை வழிப்பட்டனர். சில பக்தர்கள் மொட்டை அடித்தும், காவடிகள் எடுத்தும் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.