வைகை ஆற்றின் கரையில் தங்க மண்வெட்டி, மண் கூடையுடன் பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான்


வைகை ஆற்றின் கரையில் தங்க மண்வெட்டி, மண் கூடையுடன் பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான்
x
தினத்தந்தி 3 Sept 2025 4:32 PM IST (Updated: 3 Sept 2025 4:54 PM IST)
t-max-icont-min-icon

புட்டுத்தோப்பு பகுதியில் எழுந்தருளிய இறைவனை தரிசனம் செய்ய பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் இன்று பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலை நடந்தது. அதையொட்டி சுந்தரேஸ்வரர் தங்க மண்வெட்டி, தங்க மண் கூடை அலங்காரத்தில் மீனாட்சியுடன் காட்சி அளித்தனர். பின்னர் சுவாமியும், அம்மனும் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து கிளம்பி நான்கு சித்திரை வீதி, கீழமாசி வீதி, பழைய சொக்காநாதர் கோவில், சிம்மக்கல் வழியாக பொன்னகரம் வைகை ஆற்றின் தென்கரையில் புட்டுத்தோப்பில் உள்ள கோவிலில் எழுந்தருளினார்கள்.

அங்கு மதியம் 1.15 மணிக்கு மேல் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடந்தது. அதில் சுந்தரேஸ்வரர் சுவாமியாக ராஜா பட்டரும், பாண்டிய மன்னராக ஹலாஸ் பட்டரும் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலையை நடித்து காண்பித்தனர். புட்டுத்தோப்பு பகுதியில் நடைபெற்ற இந்த லீலையை காணவும் அங்கு எழுந்தருளிய இறைவனை தரிசனம் செய்யவும் பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பின்னர் லீலை முடிந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதை தொடர்ந்து மாலை சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி ஒர்க்‌ஷாப் ரோடு, வக்கீல் புதுத்தெரு, கீழ மாசி வீதி, அம்மன் சன்னதி வழியாக இரவு கோவிலை வந்தடைகின்றனர்.

பிட்டுக்கு மண் சுமந்த லீலை- புராண வரலாறு

வைகை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தை அடைக்க வீட்டிற்கு ஒருவர் வர வேண்டும் என்று அரசர் ஆணையிட்டார். அப்போது வந்தி என்னும் பிட்டு விற்கும் மூதாட்டி யாருமில்லாமல் தவித்தார். அப்போது இறைவனே கூலியாளாக வடிவெடுத்து வந்து, வந்தி தந்த பிட்டுக்காக மண் சுமக்கிறேன் என்று கூறினார்.

ஆனால் இறைவன் அவரது பங்கிற்கு ஒதுக்கப்பட்ட கரையை அடைக்காமல் பிட்டு அருந்தி, ஆடிப்பாடி, ஆழ்ந்த துயில் கொண்டார். அப்போது வைகை ஆற்றை பார்வையிட வந்த பாண்டிய மன்னன் தன் கையிலிருந்த பிரம்பால் படுத்திருந்த இறைவன் முதுகில் அடித்தான். அந்த அடி அனைத்து உலக உயிர்கள் முதுகிலும் பட்டது.

அரசன் உண்மை உணர்ந்தான். அப்போது இறைவன் அசரீரியாக மாணிக்கவாசகரின் பெருமையையும், வந்திக்கு சிவலோக பதவி தருவதற்காகவும் தாம் இவ்வாறு செய்வதாக மன்னனுக்கு உரைத்தார். மன்னனும் மாணிக்கவாசகரை இறைபணிக்கு விடுவித்து, தானும் சிவலோக பதவியை தக்க காலத்தில் அடைந்தான் என்று வரலாறு கூறுகிறது.

1 More update

Next Story