சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமி அம்மன் தேரோட்டம்

விழாவின் நிறைவு நிகழ்வாக நாளை மறுநாள் சிவானந்த நாயகி சமேத ஸ்ரீ சோமாஸ்கந்தர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமி அம்மன் தேரோட்டம்
Published on

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை குளம் மேற்குகரையில் திருக்காமக்கோட்டம் என்ற ஸ்ரீசிவகாமி சுந்தரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சிவகாமசுந்தரியின் பெயர் திருக்காமக் கோட்டமுடைய பெரியநாச்சியார் என்று கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ளது. கோவிலில் வெளிச்சுற்றில் சித்தரகுப்தன், நடுக்கம் தீர்த்த விநாயகர், ஆதிசங்கரர், ஸ்ரீ சக்கரம் ஆகிய சந்நிதிகள் உள்ளன.

இச்சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி பூர உற்சவம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் ஐப்பசி பூர உற்சவம் கடந்த 6 ம் தேதி இரவு (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மாலை சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. காலையில் கோவிலில் இருந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக வந்து திருத்தேரில் எழுந்தருளியதும், தேர் வடம் பிடிக்கப்பட்டது. தேர் கீழ் வீதியில் இருந்து புறப்பட்டு, நான்கு முக்கிய வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது. பக்தர்கள் பலர் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

நாளை பட்டு வாங்கும் உற்சவமும் மற்றும் பூரச்சலங்கை உற்சவமும், நாளை மறுநாள் (15-ம் தேதி) காலை தபசு உற்சவமும், இரவு ஸ்ரீ சிவானந்த நாயகி சமேத ஸ்ரீ சோமாஸ்கந்தர் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. அத்துடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com