ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு 28 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற திருப்பணி வேலைகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கின.
கும்பாபிஷேகத்திற்காக கடந்த 29ஆம் தேதி அன்று யாகசாலை பூஜைகள் துவங்கின. நரம்பு நாத பட்டர் தலைமையில் பிள்ளையார்பட்டி, கும்பகோணம் போன்ற பகுதிகளில் இருந்து வந்திருந்த சிவாச்சாரியார்கள் யாக சாலை பூஜைகளை செய்தனர்.
இன்று அதிகாலையில் யாக சாலை பூஜைகள் நிறைவடைந்ததையடுத்து, அதிகாலை 5.30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் கோபுரங்கள், மூலஸ்தான விமானம் ஆகியவற்றிற்கு கொண்டு செல்லப்பட்டன. 6.40 மணிக்கு வேதங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தர்மபுரம் ஆதீன மடாதிபதி கலந்துகொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.