விடுமுறை தினம்... திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பொது தரிசன வழியில் சென்று மூலவரை தரிசிக்க, பக்தர்கள் கொளுத்தும் வெயிலில் 3 மணி நேரம் காத்திருந்தனர்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக திகழ்வது திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம். மற்ற நாட்களை விட விடுமுறை தினங்களில் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
அவ்வகையில் இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பொது தரிசன வழியில் சென்று மூலவரை தரிசிக்க, பக்தர்கள் கொளுத்தும் வெயிலில் 3 மணி நேரம் காத்திருந்தனர். 100 ரூபாய் கட்டண தரிசனத்தில் ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
விடுமுறை தினமான இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.






