வைகாசி விசாகம்: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை


வைகாசி விசாகம்: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை
x

வைகாசி விசாகத்தையொட்டி மருதமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

கோவையை அடுத்த மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டது. அதன்பின்னர் காலை 6 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு, பால், சந்தனம், தயிர், நெய், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

சுப்பிரமணிய சுவாமி விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவமூர்த்திகளான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தங்க கவசத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினர் தொடர்ந்து திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மூலவர், உற்சவர் பாலமுருகனுக்கு பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கொண்டு வந்த பாலால் அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டு முருகன் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

வைகாசி விசாகத்தையொட்டி மருதமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்க மலைப்பாதையில் கார்கள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. கோவில் சார்பில் உள்ள மினி பஸ்கள் இயக்கப்பட்டன. இரு சக்கர வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டது.

1 More update

Next Story