வேலாயுதம்பாளையம்: முருகன் கோவில்களில் கந்த சஷ்டி 2-ம் நாள் விழா

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பாலசுப்பிரமணிய சுவாமி
கோவில்களில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் 2ஆம் நாளை முன்னிட்டு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, விபூதி, தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் சஷ்டி விரதம் இருக்கும் முருக பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பாலசுப்பிரமணியசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல் புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி 2ஆம் நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






