துபாய் கராமா பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து; கேரள வாலிபர் பலி


துபாய் கராமா பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து; கேரள வாலிபர் பலி
x
தினத்தந்தி 20 Oct 2023 12:00 PM GMT (Updated: 20 Oct 2023 12:00 PM GMT)

துபாய் கராமா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் கேரள வாலிபர் பலியானார்.

துபாய்:

துபாயின் கராமா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தங்கியிருந்தனர். இந்த கட்டிடத்தின் 3-வது மாடியில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்து, அந்த கட்டிடத்தில் மளமளவென எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். அதன் பின்னர் அங்கு இருந்தவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தின் காரணமாக கேரளாவைச் சேர்ந்த 40 வயது நபர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் அங்கிருந்து மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் பலியானவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த தீ விபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் ஒழுங்குபடுத்தினர். இந்த விபத்து குறித்து துபாய் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story