பயிற்சியாளருடன் மோதல்: உலகக்கோப்பையில் இருந்து பாதியில் வெளியேறுகிறாரா..! ரொனால்டோ விளக்கம்


பயிற்சியாளருடன் மோதல்: உலகக்கோப்பையில் இருந்து பாதியில் வெளியேறுகிறாரா..!  ரொனால்டோ விளக்கம்
x

ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட இளம்வீரர் ரேமோஸ் களத்தில் சிறப்பாக செயல்பட்டு ஹட் ட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

தோஹா:

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில், போர்ச்சுக்கல் அணியின் கேப்டனும், கோல் மெஷின் என அழைக்கப்படும் தலைசிறந்த வீரருமான கிறிஸ்டியானா ரொனால்டோ (வயது 37), களமிறக்கப்படவில்லை. கடைசி நேரத்தில் மாற்று வீரராக களமிறக்கப்பட்டார்.

அதிலும் அவருக்கு பதிலாக 21 வயது இளம்வீரர் ரேமோஸ் களமிறக்கப்பட்டார். இத்தனைக்கும் லீக் போட்டிகள் அனைத்திலும் ரொனால்டோவே ஆடும் லெவனில் இடம்பிடித்திருந்த நிலையில், முக்கிய நாக் அவுட் போட்டியில் அவர் உக்காரவைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் போர்ச்சுகல் அணி தடுமாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் இருந்தே அந்த அணி அசத்தலாக விளையாடியது. அதிலும் ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட இளம்வீரர் ரேமோஸ் களத்தில் சிறப்பாக செயல்பட்டு ஹட் ட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணி 5-1 என்ற கணக்கில் வலுவான நிலையில் இருந்தபோது ரொனால்டோ மாற்றுவீரராக களமிறக்கப்பட்டார். பொதுவாக அணி வலுவான நிலையில் இருக்கும்போது அந்த அணியின் முக்கிய வீரரை யாரும் களமிறக்கமாட்டார்கள்.

ஆனால், அந்த நிலையில் ரொனால்டோ களமிறக்கப்பட்டது அவர் அணியில் முக்கிய வீரராக இனியும் கருத்தப்படமாட்டார் என்பதை குறிப்பதாகவே அமைந்தது. அதன்பின்னர் ரொனால்டோ அடித்த கோல் ஒன்றும் ஆப் சைடு என மறுக்கப்பட்டது. ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில் போர்ச்சுகல் மற்றொரு கோல் அடிக்க ஆட்டம் 6-1 என்ற கணக்கில் முடிவுக்கு வந்து போர்ச்சுகல் காலிறுதிக்கு முன்னேறியது.

இந்த போட்டி முழுக்கவே ரொனால்டோ இறுகிய முகத்தோடுதான் காணப்பட்டார். அணி கோல் அடித்தபோது கூட அவர் பெரிய அளவில் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை. வெற்றிபெற்றபோதும் அதே பாவனையில்தான் காணப்பட்டார். இதனால் அவரின் முகம் அடிக்கடி கேமராவில் காட்டப்பட்டுக்கொண்டே இருந்தது.

ஏற்கனவே கிளப் போட்டிகளில் ரொனால்டோ புறக்கணிக்கப்பட்ட நிலையில், தற்போது தேசிய அணியிலும் அவருக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து ரொனால்டோவின் காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்

"உலகின் தலைசிறந்த வீரரை 90 நிமிடங்கள் ரசிக்க முடியாமல் போனது என்ன அவமானம். ரசிகர்கள் ரொனால்டோவை கேட்பதையும் அவரது பெயரைச் சொல்லி கத்துவதையும் நிறுத்தவில்லை. கடவுளும் பெர்னாண்டோவும் சேர்ந்து இதேபோல் இன்னொரு போட்டியிலும் இதே அதிர்ச்சியை எங்களுக்கு தரட்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

ஸ்சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ மீது அந்த அணியின் பயிற்சியாளர் சண்டோஸ்க்கு அதிருப்தி நிலவியதாக கூறப்பட்ட நிலையில், அது குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் "எனக்கு என்ன யுக்தி சரியென்று படுகிறதோ எதை நான் நம்புகிறேனோ அதனை களத்தில் பயன்படுத்துவேன்" என்று அவர் கூறியுள்ளதன் மூலம் ரொனால்டோ அடுத்த போட்டியிலும் வெளியேதான் அமர்த்தப்படுவார் என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக ரொனால்டோ ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்துடனான போட்டி தொடங்கியபோது, தேசிய அணியில் இருந்து விலகப் போவதாக மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியானது. தலைமை பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோசுடனான உரையாடலின்போது இதனை தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் அணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு விளக்கம் அளித்தது. அதில், "கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ எந்த நேரத்திலும் கத்தாரில் தேசிய அணியை விட்டு வெளியேறுவதாக மிரட்டவில்லை. அவர் தேசிய அணிக்காகவும் நாட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் ஒரு தனித்துவமான சாதனையை உருவாக்குகிறார். இதை மதிக்க வேண்டும்" என கூறியிருந்தது.

இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரொனால்டோ குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டி நடைபெற்ற நாளில் மதிய உணவுக்குப் பிறகு ரொனால்டோவை எனது அலுவலகத்திற்கு அழைத்தேன். அவர் எப்போதும் ஆரம்பத்திலேயே களமிறங்கியதால், நான் எடுத்த முடிவு அவருக்கு திருப்தி அளிக்கவில்லை.

இது ஒரு நல்ல யோசனை என்று நினைக்கிறீர்களா? என என்னிடம் கேட்டார். இந்த உரையாடல் சாதாரணமாகவே இருந்தது. நான் எனது கருத்துக்களை விளக்கினேன். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.

வெளிப்படையாகவும் சாதாரணமாகவும் உரையாடினோம். அப்போது அவர் தேசிய அணியை விட்டு வெளியேற விரும்புவதாக என்னிடம் ஒருபோதும் கூறவில்லை. அவர் தனது சக வீரர்களை ஊக்குவிக்க முடிவு செய்தார்.

மேலும் நாங்கள் அடித்த அனைத்து கோல்களையும் கொண்டாடினார். இறுதியில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சக வீரர்களை அழைத்தார். அவரை விட்டுவிடுங்கள். அவரை சுதந்திரமாக விட்டுவிட வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும், 90 சதவீத கேள்விகள் அவரைப் பற்றியே இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ரொனால்டோ வெளியிட்டு உள்ள டுவிட்டில்

"வெளிச் சக்திகளால் உடைக்க முடியாத அளவுக்கு நெருக்கமான ஒரு அணி இது. எந்த எதிரியாலும் பயமுறுத்துவதற்குத் துணிந்த தேசம். வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில், கனவுக்காக இறுதிவரை போராடும் ஒரு அணி! எங்களை நம்புங்கள்! வலிமை , போர்ச்சுகல்!," என்று ரொனால்டோ டுவீட் செய்துள்ளார்.


Next Story