பல் மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பம்


பல் மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பம்
x

AI Image for representation

இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரி கூட்டரங்கில் நேற்று, 2025-26-ம் கல்வியாண்டுக்கான தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

நடப்பு கல்வியாண்டுக்கான இடப்பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை சீராக நடைபெற வலியுறுத்தப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் தவிர விடுதிக் கட்டணம் போன்ற பிற கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு முடிவு வெளியான பின்னர் தான் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. எனவே, இந்த ஆண்டு நீட் தேர்வு முடிந்து, மாணவர்களின் மேல்நிலைப் பள்ளி இறுதி தேர்வு முடிவு வெளியான பின்னர் விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும். இதன் மூலம், சிரமம் குறைந்து தவறான மற்றும் போலியான விண்ணப்பங்கள் நீக்குவது எளிதாக இருக்கும்.

நடப்பாண்டில், நாளை (6-ந்தேதி) முதல் இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். வழக்கமாக மாணவர்கள் பதிவேற்றம் செய்யும் நீட் தேர்வு மதிப்பெண்கள் தேசிய தேர்வு முகமை அளிக்கும் தரவுகளின் அடிப்படையில் சரிபார்க்கப்படும். எனவே, தற்போது மாணவர்கள் பதிவேற்றும் நீட் வரிசை எண் மற்றும் நீட் நுழைவுச் சீட்டு அடிப்படையில் தேசிய தேர்வு முகமை அளிக்கும் மதிப்பெண்கள் பெறப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் விண்ணப்பம் சமர்ப்பிக்க விரும்பும் மாணவர்களுக்காக விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குனர் சங்குமணி, தேர்வுக்குழு செயலாளர் தேரணிராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story