குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு: ஒரு இடத்துக்கு 650 பேர் போட்டி

குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வை எழுத 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் விண்ணப்பித்த நிலையில், 75.64 சதவீதம் பேர் எழுதினர்.
சென்னை,
உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளில் 50 காலிப் பணியிடங்களும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2ஏ பதவிகளில் 595 இடங்களும் என மொத்தம் 645 இடங்கள் தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜூலை மாதம் 15-ந்தேதி அறிவித்தது.
இந்த பணியிடங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 495 ஆண்களும், 3 லட்சத்து 41 ஆயிரத்து 114 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான தேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. காலை 9 மணிக்குள் வந்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடந்து முடிந்தது.தேர்வை பொறுத்தவரையில், சற்று கடினமாக இருந்ததாகவே தேர்வர்கள் தெரிவித்தனர்.
தேர்வை எழுத விண்ணப்பித்த 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேரில், 4 லட்சத்து 18 ஆயிரத்து 791 பேர் தேர்வை எழுதி இருக்கின்றனர். 1 லட்சத்து 34 ஆயிரத்து 843 பேர் எழுத வரவில்லை. அதாவது விண்ணப்பித்தவர்களில் 75.64 சதவீதம் பேர் தேர்வை எழுதி உள்ளனர். 645 குரூப்-2, 2ஏ காலிப் பணியிடங்களுக்கு 4 லட்சத்து 18 ஆயிரத்து 791 பேர் போட்டியிடுகிறார்கள். ஒரு இடத்துக்கு மட்டும் 650 பேர் களத்தில் நிற்கிறார்கள்.






