

ஜம்மு,
ஜம்மு காஷ்மீரில் மழைக்கு மத்தியிலும் பக்தர்கள் அமர்நாத் யாத்திரை புறப்பட்டு உள்ளனர். கடந்த 3-ந்தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. கவர்னர் மனோஜ் சின்கா யாத்திரையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 38 நாட்கள் நடைபெறும் இந்த வருடாந்திர யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று பனிலிங்கத்தை தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு 3.5 லட்சத்துக்கும் அதிகமானார் யாத்திரைக்காக ஆன்லைனில் பதிவு செய்து உள்ளனர். இன்னும் ஏராளமானவர்கள் நேரடி கவுண்ட்டர்களில் பதிவு செய்து செல்கிறார்கள்.
நேற்றுமுன்தினம் வரை அமர்நாத் யாத்திரை புறப்பட்டு உள்ள பக்தர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்த நிலையில் நேற்று புதிதாக 7 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட 5-வது குழு அமர்நாத் யாத்திரையை தொடங்கி உள்ளது. இதில் 1587 பெண்கள் மற்றும் 30 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பகவதி நகர் அடிப்படை முகாமில் இருந்து 2 தனி வரிசைகளில் புறப்பட்டு சென்றனர். இரவு முழுவதும் கனமழை பெய்து கொண்டிருந்தபோதும், யாத்ரீகர்கள் உற்சாகமாக பயணத்தை தொடங்கி உள்ளனர். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அமர்நாத் அடிப்படை முகாம்கள் மற்றும் யாத்திரை வழித்தடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.