டி.கே.சிவக்குமார் ஜனவரி 6-ந்தேதி முதல்-மந்திரி ஆவார் - காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணிப்பு

டி.கே.சிவகுமார் முதல்-மந்திரி ஆவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என இக்பால் ஹுசைன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி எழுந்த நிலையில் இறுதியில் சித்தராமையா முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். முதல்-மந்திரி பதவியை 2 பேரும் ஆட்சிக்காலத்தில் பாதியாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அப்போது ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி சித்தராமையா ஆட்சி அதிகாரத்தில் 2.5 ஆண்டுகள் நிறைவு செய்துவிட்டதால் முதல்-மந்திரி பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திடீரென போர்க்கொடி தூக்கினார். இது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியது. இதற்கிடையில், காங்கிரஸ் மேலிட உத்தரவுப்படி சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இருவரும் ஒன்றாக சிற்றுண்டி சாப்பிட்டு, தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று விளக்கமளித்தனர். இதன்மூலம் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், டி.கே.சிவக்குமார் ஜனவரி 6-ந்தேதி முதல்-மந்திரி ஆவார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. இக்பால் ஹுசைன் கணித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல்-மந்திரி பதவியில் இருந்து சித்தராமையா விலக வேண்டும். டி.கே.சிவகுமார் முதல்-மந்திரி ஆவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஜனவரி 6-ந்தேதி அவர் முதல்-மந்திரியாக பதவியேற்பதற்கு 99 சதவீதம் வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.
“சரியாக ஜனவரி 6-ந்தேதி என்று குறிப்பிட்டு கூறுவது ஏன்?” என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “எனக்கு தெரியாது. அது ஒரு தோராயமான எண் தான். எல்லோரும் இதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அது ஜனவரி 6 அல்லது 9 ஆகிய இரண்டு தேதிகளில் ஏதோ ஒன்றாக இருக்கலாம்”என்று தெரிவித்தார். இருப்பினும் அவரது இந்த கணிப்பை உறுதி செய்யும் வகையில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






