மேற்கு வங்காளத்தில் 1,000 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு நோட்டீஸ் - தேர்தல் ஆணையம் நடவடிக்கை

அதிகாரிகள் பதிலளிக்க தவறினால் அவர்கள் மீது சட்டம் மற்றும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தை சேர்ந்த சுமார் 1,000 வாக்குச்சாவடி அதிகாரிகள், தங்கள் பெயரை எரோ-நெட் தளத்தில், வாக்குச்சாவடி அதிகாரியாக பதிவு செய்ய தவறி உள்ளனர். இது தொடர்பாக தேர்தல் பதிவு அதிகாரியிடம் இருந்து பல முறை நினைவூட்டல் வழங்கப்பட்டும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர்களிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இத்தகைய தவறு வேண்டுமென்றே நடந்திருப்பதாகவும், இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 32-ம் பிரிவின் கீழ் கடுமையான தேர்தல் கடமை நிறைவேற்றாத குற்றம் என அந்த நோட்டீசில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த அதிகாரிகள் பதிலளிக்க தவறினால் அவர்கள் மீது சட்டம் மற்றும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






