இளம்பெண் பெயரில் பேக் ஐ.டி. தொடங்கி நூதன முறையில் பழிவாங்கிய முன்னாள் காதலர்

இளம்பெண்ணின் நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோருக்கு பேக் ஐ.டி. மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பணம் கேட்டுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், தனது பெயரில் மர்ம நபர்கள் சமூக வலைதளத்தில் பேக் ஐ.டி. ஒன்றை தொடங்கி, அதன் மூலம் தனது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் பணம் கேட்டு மோசடி செய்து வருவதாக தெரிவித்திருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்ட பேக் ஐ.டி. எந்த பகுதியில் இருந்து இயக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்தனர். இதன்படி டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த அமான் என்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் புகார் கொடுத்த பெண்ணின் முன்னாள் காதலர் என்பது தெரியவந்தது. தனது முன்னாள் காதலியை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்த அமான், அதற்காக நூதன முறையை கையாண்டுள்ளார். அதன்படி சமூக வலைதளத்தில் தனது முன்னாள் காதலியின் பெயரில் பேக் ஐ.டி. ஒன்றை தொடங்கியுள்ளார்.
பின்னர் அவரது நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோருக்கு குறுஞ்செய்தி அனுப்பி தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கேட்டுள்ளார். இதை நம்பி சிலர் பணத்தை அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் இளம்பெண்ணின் தோழிகள் சிலர் சந்தேகமடைந்து இது குறித்து விசாரித்தபோதுதான், பணம் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியது பேக் ஐ.டி. என்பது தெரியவந்தது.
இதையடுத்து இளம்பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்த நிலையில், அமான் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






