காதல் ஜோடிக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு; சமரசம் செய்ய சென்ற வாலிபர் கர்ப்பிணி மனைவியின் முன் படுகொலை

பூஜாவின் குடும்பத்தினருக்கு எதிராக, திலக்கின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
துர்க்,
சத்தீஷ்காரின் துர்க் நகரில் பூஜா மற்றும் திலக் சாகு என்ற காதல் ஜோடி குடும்பத்திற்கு தெரியாமல் காதலித்து வந்தனர். இதற்கு அவர்கள் இருவரின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவர்கள் ஒப்புதல் இன்றியே, கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.
இதுபற்றி தெரிய வந்ததும், 2 பேரின் குடும்பத்தினரும் கொந்தளித்தனர். இதனால், பதற்றம் தொற்றி கொண்டது. பூஜாவின் குடும்பத்தினருக்கு எதிராக, திலக்கின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது, பூஜாவின் உறவினரான நீரஜ் தாக்குர், சமரசம் செய்ய வந்துள்ளார். நடந்தது நடந்து விட்டது. அதனால் அமைதியாக இருங்கள். பதற்றமடைய வேண்டாம் என கூறியிருக்கிறார். ஆனால், திலக்கின் உறவினர்கள் இதற்கு காரணம் அவர்தான் என முடிவுக்கு வந்துள்ளனர். ஆத்திரமடைந்த அவர்கள், கர்ப்பிணி மனைவியின் முன்னால் நீரஜை அவர்கள் கம்புகளாலும், கத்தியாலும் தாக்கினர்.
இதில், அவர் படுகாயமடைந்து உள்ளார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்து விட்டார். சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதவிர, கைது செய்யப்பட்ட 3 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.






