இண்டிகோ பிரச்சினை மத்திய அரசின் ஏகபோக மாடலின் விலை - ராகுல் காந்தி விமர்சனம்

அரசின் தவறுக்கு, தாமதம், ரத்து, உதவியின்மை என மீண்டும் ஒருமுறை சாதாரண இந்தியர்கள்தான் விலை கொடுத்துள்ளனர் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
விமான பணி நேர வரம்பு தொடர்பான பிரச்சினையால் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவைகள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளன. நேற்று 550-க்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்றும் 400 விமானங்கள் ரத்தாகின. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘இண்டிகோ பிரச்சினை மத்திய அரசின் ஏகபோக மாடலின் விலை. அரசின் தவறுக்கு, தாமதம், ரத்து, உதவியின்மை என மீண்டும் ஒருமுறை சாதாரண இந்தியர்கள்தான் விலை கொடுத்துள்ளனர்’ என சாடியுள்ளார். ஒவ்வொரு துறையிலும் மேட்ச் பிக்சிங் ஏகபோகங்கள் இல்லாமல் நேர்மையான போட்டிக்கு இந்தியா தகுதியானது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும் இந்தியாவில் பல துறைகளில் ஏகபோகங்களுக்கு அரசு துணை புரிவதை சுட்டிக்காட்டி கடந்த ஆண்டு அவர் எழுதியிருந்த கட்டுரை ஒன்றையும் தனது எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பகிர்ந்திருந்தார்.






