கேரளா: குறுக்கே புகுந்த பாம்பால் ஆட்டோ கவிழ்ந்தது; 2 பள்ளி குழந்தைகள் பலி

ஆட்டோவை வேறு பக்கம் திருப்பியபோது, அது புரண்டு, பக்கத்தில் இருந்த வாழை தோட்டத்திற்குள் கவிழ்ந்தது.
பத்தனம்திட்டா,
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்றது. அப்போது, ஆட்டோவின் முன்னால் திடீரென பாம்பு ஒன்று குறுக்கே சென்றுள்ளது. இதனால், பாம்பின் மீது ஏற்றி விட கூடாது என்பதற்காக அதன் ஓட்டுநர் ஆட்டோவை வேறு பக்கம் திருப்பியுள்ளார். அப்போது, அது புரண்டு, பக்கத்தில் இருந்த வாழை தோட்டத்திற்குள் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சிக்கி, ஆட்டோவில் இருந்த பள்ளி மாணவ மாணவிகள் படுகாயமடைந்தனர். ஆட்டோ மேலே விழுந்ததில் ஆதி லட்சுமி (வயது 8) மற்றும் யது கிருஷ்ணன் (வயது 4) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆட்டோ ஓட்டுநருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஒரு குழந்தையை சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.
கேரளாவில் பாம்பு குறுக்கே புகுந்து ஆட்டோ கவிழ்ந்து 2 பள்ளி குழந்தைகள் பலியானது அந்த பகுதியினரிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






