நேபாளத்தில் புதிய அரசு நாளை பதவியேற்பு: மீண்டும் பிரதமராகிறார் கே.பி.சர்மா ஒலி

கோப்புப்படம்
நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலியை இன்று ஜனாதிபதி நியமிக்கிறார்.
காத்மாண்டு,
நேபாளத்தில் புஷ்பகமல் தாஹல் என்ற பிரசந்தா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால் பட்ஜெட் தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சியில் அங்கம் வகித்து வந்த முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்டு கட்சி ஆதரவை திரும்ப பெற்றது.
இதனால் பெரும்பான்மையை இழந்த பிரதமர் பிரசந்தா, நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பெரும்பான்மை பெற முடியாமல் பிரசந்தா அரசு தோல்வி அடைந்தது.
இதைத்தொடர்ந்து நேபாளி காங்கிரஸ் கட்சியும், நேபாள கம்யூனிஸ்டு கட்சியும் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைப்பதற்கான நடவடிக்கையை எடுத்தன. பின்னர் புதிய அரசை அமைக்க ஜனாதிபதியிடம் கே.பி.சர்மா ஒலி உரிமை கோரினார். இதை ஜனாதிபதி ராம் சந்திர பவுடல் ஏற்றுக்கொண்டார். நாட்டின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி நியமிக்கிறார். நாளை (திங்கட்கிழமை) காலையில் புதிய பிரதமரும், மந்திரிகளும் பதவியேற்கிறார்கள்.






