டிரம்ப்பை பார்த்து மோடி பயப்படுகிறார்-ராகுல் காந்தி கடும் விமர்சனம்

ஆபரேஷன் சிந்தூர் குறித்த டிரம்ப்பின் கருத்துக்கு மோடி மறுப்பு தெரிவிக்கவில்லை என்று ராகுல் காந்தி சாடியுள்ளார்.
புது டெல்லி,
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.
பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதை கடுமையாக விமர்சித்துள்ளார். டிரம்ப்பை பார்த்து பிரதமர் மோடி பயப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
டிரம்ப்பை பார்த்து மோடி பயப்படுகிறார்.
1.ரஷியாவின் எண்ணையை இந்தியா வாங்காது என்று முடிவு செய்து டிரம்ப்பை அறிவிக்க அனுமதிக்கிறார்.
2. மீண்டும் மீண்டும் அவமதிக்கப்பட்ட பிறகும் வாழ்த்து செய்தியை அனுப் பிக் கொண்டே இருக்கி றார்.
3. அமெரிக்கா செல்லும் நிதி மந்திரியின் பயணத்தை ரத்து செய்தார்.
4. ஷார்ம் எல்-ஷேய்க் பயணத்தை தவிர்த்தார்.
5. ஆபரேஷன் சிந்தூர் குறித்த டிரம்ப்பின் கருத்துக்கு மறுப்பு தெரி விக்கவில்லை.
இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.
பிரதமரின் மவுனம்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைதள பதிவில் கூறி இருப்ப தாவது:-
இந்திய நேரப்படி மே 10 அன்று மாலை 5.37 மணிக்கு அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மார்கோ ரூபியோ ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதாக முதலில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 5 வெவ்வேறு நாடுகளில் 51 முறை வரிகள் மற்றும் வர்த்தக அழுத்தத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி ஆபரேஷன் சிந்தூரை நிறுத்த தலையிட்டதாகக் கூறியுள்ளார். ஆனாலும் நமது பிரதமர் அமைதியாக இருந்தார்.
தற்போது அதிபர் டிரம்ப் ரஷியாவில் இருந்து இந்தியா எண்ணை இறக்குமதி செய்யாது என மோடி உறுதி அளித்துள்ளதாக அறிவித்துள்ளார். மோடி முக்கிய முடிவுகளை அமெரிக்கா எடுக்க உரிமை கொடுத்துள்ளதாக தெரிகிறது. 56 அங்குல மார்பு சுருங்கி விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






