பிறந்து 15 நாளேயான குழந்தையுடன் வெள்ளத்தில் 4 நாட்களாக சிக்கி தவித்த தாய்; பாதுகாப்பாக மீட்ட ராணுவம்

ஏணி உதவியுடன் முதல் மாடிக்கு சென்று, தாயையும், பிறந்து 15 நாளேயான குழந்தையையும் மீட்டனர்.
பிறந்து 15 நாளேயான குழந்தையுடன் வெள்ளத்தில் 4 நாட்களாக சிக்கி தவித்த தாய்; பாதுகாப்பாக மீட்ட ராணுவம்
Published on

சண்டிகார்,

பஞ்சாபில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, குர்தாஸ்பூர் மாவட்டத்தில் தங்காய் கிராமத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் வீடுகள், கட்டிடங்களை சுற்றி நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

இந்நிலையில், கர்ப்பிணி ஒருவருக்கு 15 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. அவர் வீட்டின் முதல் மாடியில் வசித்து வருகிறார். வெள்ளம் சூழ்ந்த நிலையில், அவரால் குழந்தையுடன் வெளியே வர முடியவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்து ராணுவ வீரர்கள் அந்த பகுதிக்கு சென்றனர். ஏணி உதவியுடன் முதல் மாடிக்கு சென்று, தாயையும், பிறந்து 15 நாளேயான குழந்தையையும் மீட்டு, படகில் பாதுகாப்பாக வைத்து, 3 கி.மீ. தொலைவுக்கு அழைத்து வந்தனர். இதன்பின்னர், ராணுவ வாகனத்தில் 15 கி.மீ. தொலைவுக்கு அழைத்து சென்று பாதுகாப்பான இடத்தில் விட்டனர்.

4 நாட்களாக வெள்ளம் சூழ்ந்த வீட்டில் சிக்கி தவித்த அந்த குழந்தை, தாயுடன் மொத்தம் 18 கி.மீ. தூரத்திற்கு பயணித்து பாதுகாப்பான பகுதியை சென்றடைந்தது. ராணுவ வீரர்கள், தாய் மற்றும் குழந்தையை மீட்டு, பின்னர் படகில் கொண்டு செல்லும் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com