6 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றார் கடற்படை தளபதி திரிபாதி

Image Courtesy : ANI
அமெரிக்க பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரிகளுடன் அட்மிரல் திரிபாதி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்திய கடற்படை தளபதி அட்மிரல் திரிபாதி, 6 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் விதிகள் சார்ந்த இந்தோ-பசிபிக் பகுதியை உறுதி செய்யும் நோக்கத்துடன் இருதரப்பு கடற்படை உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்ததைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் சூழலில், கடற்படை தளபதி தற்போது அமெரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின்போது அமெரிக்க பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரிகளுடன் அட்மிரல் திரிபாதி பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளை தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே.பாபரோ மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீபன் டி கோஹ்லரை சந்திப்பார் என்றும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படைக்கும் அமெரிக்க கடற்படைக்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த கடல்சார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதே அட்மிரல் திரிபாதியின் பயணத்தின் முக்கிய நோக்கம் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






