‘புதுச்சேரியில் பழைய மின் கட்டணமே தொடரும்’ - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

கட்டண உயர்வுக்கான மானியத்தை புதுச்சேரி அரசு வழங்கும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவையில் மின்கட்டணம் திடீரென மீண்டும் உயர்த்தப்பட்டதாக நேற்று அறிவிப்பு வெளியானது. விட்டு உபயோக கட்டணம் யூனிடுக்கு 20 பைசா உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இது 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தகவல் வெளியானதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், புதுச்சேரியில் பழைய மின் கட்டணமே தொடரும் என மின்சாரத் துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மின் கட்டணம் நிச்சயமாக உயர்த்தப்படவில்லை. ஒரு யூனிட்டுக்கு 20 பைசா உயர்த்த வேண்டும் என ஜே.இ.ஆர்.சி. பரிந்துரை செய்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு இதுபோல் ஒரு சூழ்நிலை வந்தபோது புதுச்சேரி அரசு அதனை ஏற்றுக்கொண்டு, அந்த தொகையை மானியமாக மக்களுக்கு வழங்கி வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் புதுச்சேரி அரசாங்கமே கட்டண உயர்வுக்கான மானியத்தை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
எனவே, அதனை அரசாங்கமே செலுத்தும். இது பொதுமக்கள் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. புதுச்சேரியில் பழைய மின் கட்டணமே தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.






