இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 31-10-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 31-10-2025
x
தினத்தந்தி 31 Oct 2025 8:57 AM IST (Updated: 11 Nov 2025 9:15 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 37 போட்டிக்கு பின் தோல்வி
    31 Oct 2025 7:21 PM IST

    37 போட்டிக்கு பின் தோல்வி

    இந்திய டி20 அணியின் பிளேயிங் 11-ல் ஷிபம் துபே இடம்பெற்றால் தோற்றதே இல்லை என்ற சாதனை. 37 வெற்றிகளுக்கு பிறகு முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் தோற்றதன்மூலம், 17 வருடங்களுக்கு பிறகு மெல்போர்ன் மைதானத்தில் தோல்வியை தழுவியது இந்தியா.

  • 9 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
    31 Oct 2025 6:40 PM IST

    9 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 2 முறை நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதாவுக்கும் கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். முன்னாள் எம்எல்ஏ ஓய்வூதியத்தை உயர்த்துவது, சிறு குற்றங்களுக்கு சிறைத்தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதா உள்பட 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

  • ரசிகர்களின் அன்பு குறித்து மனம் திறந்து பேசிய நடிகரும் ரேஸருமான அஜித்குமார்
    31 Oct 2025 6:26 PM IST

    ரசிகர்களின் அன்பு குறித்து மனம் திறந்து பேசிய நடிகரும் ரேஸருமான அஜித்குமார்

    ரசிகர்கள் என் மீது பொழியும் அன்புக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன். ஆனால், அதே அன்பின் காரணமாகவே, குடும்பத்துடன் நான் வெளியே செல்வதில்லை. என் மகனை பள்ளிக்கு கொண்டு சென்று விடக் கூட என்னால் முடியாது. சில நேரங்களில் என்னை கிளம்பச் சொல்லி பணிவாக கேட்டுக்கொண்ட சூழல் கூட வந்துள்ளது.

  • பணி நியமனத்தில் முறைகேடு என புகார் மனு
    31 Oct 2025 6:22 PM IST

    பணி நியமனத்தில் முறைகேடு என புகார் மனு

    அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகத் துறையில் நேரடி பணி நியமனம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பாஜக வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் என புகார் மனு அளித்துள்ளார்.

  • 31 Oct 2025 6:15 PM IST

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து செங்கோட்டையன் கூறியது என்ன.?

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கோள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து செங்கோட்டையன் கூறியதாவது:

    ”என்னை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து நாளை விரிவாக விளக்கம் அளிக்கிறேன். நாளை காலை 11 மணிக்கு தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விரிவாக பேசுகிறேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார். 

  • 31 Oct 2025 5:45 PM IST

    அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் - எடப்பாடி பழனிசாமி அதிரடி

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

    ”அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.செங்கோட்டையன், எம்.எல்.ஏ., (கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.”

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • தமிழகத்தில் நவம்பரில் மழை குறையும்
    31 Oct 2025 5:05 PM IST

    தமிழகத்தில் நவம்பரில் மழை குறையும்

    தமிழகத்தில் நவம்பரில் குறைவான மழையே பதிவாக வாய்ப்பு உள்ளது. இந்தியா முழுவதும் பருவமழை நவம்பர் மாதத்தில் இயல்பைவிட அதிகமாக பதிவாகும். மற்ற மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை இயல்படை விட அதிகமாக பதிவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • ORSL லேபிள் ஒட்டிய பொருட்களுக்கு கட்டுப்பாடு
    31 Oct 2025 4:48 PM IST

    ORSL லேபிள் ஒட்டிய பொருட்களுக்கு கட்டுப்பாடு

    தமிழகத்தில் உள்ள மருந்தகம் மற்றும் கடைகளில் ORSL என்ற லேபிளை ஒட்டிய பொருட்களுக்கு சுகாதாரத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. ORSL, ORSL Plus, ORS Fit என்ற பவுடர்களை விற்பனை செய்தால் உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

  • இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டுகால பாதுகாப்பு ஒப்பந்தம்
    31 Oct 2025 4:41 PM IST

    இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டுகால பாதுகாப்பு ஒப்பந்தம்

    மலேசியாவில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இடையேயான சந்திப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

  • மார்ச் இறுதிக்குள் இலவச லேப்டாப்
    31 Oct 2025 4:34 PM IST

    மார்ச் இறுதிக்குள் இலவச லேப்டாப்

    கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தில் முதற்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. ஹெச்பி, டெல், ஏசர் ஆகிய 3 நிறுவனங்கள் லேப்டாப் சப்ளை செய்யும் நிலையில், மார்ச் மாத இறுதிக்குள் மாணவர்கள் விநியோகிக்கும் பணிகளை முழுமையாக முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

1 More update

Next Story