பிரதமர் மோடி ஆந்திரா வருகை - மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் சாமி தரிசனம்

ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மாரம்ப மல்லிகார்ஜுன சுவாமி கோவிலுக்கு பிரதமர் மோடி சென்றார்.
அமராவதி,
ஆந்திர மாநிலத்தில் ரூ.13,430 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று வருகை தந்துள்ளார். முன்னதாக கர்னூல் மாவட்டத்திற்கு விமானம் மூலம் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கவர்னர் அப்துல் நசீர் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.
இதையடுத்து பிரதமர் மோடி ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மாரம்ப மல்லிகார்ஜுன சுவாமி கோவிலுக்கு சென்றார். ஜோதிர்லிங்கமும், சக்தி பீடமும் ஒரே இடத்தில் அமைந்திருப்பது இந்த கோவிலின் தனிச்சிறப்பாகும். அங்கு சென்று பிரதமர் மோடி ருத்ராபிஷேக பூஜை செய்து வழிபட்டார். அவருடன் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதன் பிறகு சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அதனை தொடர்ந்து கர்னூல் மாவட்டத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.13,430 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து, பின்னர் அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற்று உரையாற்ற உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






