விவசாயிகளுக்கு உதவுவதில் பிரதமர் ஒருபோதும் தாமதிக்க மாட்டார்: அமித்ஷா உறுதி

விவசாயிகளுக்கு உதவுவதில் பிரதமர் மோடி தாமதம் செய்ய மாட்டார் என்று மராட்டியத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
அகில்யாநகர்
மராட்டிய மாநிலத்துக்கு சென்றுள்ள உள்துறை மந்திரி அமித்ஷா பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நடத்தப்பட்ட விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
மராட்டியத்தில் முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிசும் இருந்தபோது, பா.ஜனதா தலைமையிலான அரசு, அவுரங்காபாத்தின் பெயரை அகில்யாபாய் என்று மாற்றம் செய்தது. இதுமாதிரியான முடிவுகளை சத்ரபதி சிவாஜி மீது பற்று கொண்டவர்கள் மட்டுமே எடுக்க முடியும். இந்த மாவட்டம் (அகில்யாநகர்) அகில்யா பாயின் பெயரோடு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.கனமழை காரணமாக மராட்டியத்தில் 60 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்கள் மற்றும் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்-மந்திரிகளான ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் என்னுடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து அரசு விரிவான அறிக்கையை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். விவசாயிகளுக்கு உதவுவதில் பிரதமர் மோடி எப்போதும் தாமதம் செய்ய மாட்டார். கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். அதேபோல, நவராத்திரிக்கு முன்பாக, 395 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.(சரக்கு சேவை வரி)யை பிரதமர் மோடி குறைத்தார். பல அத்தியாவசியப் பொருட்களுக்கு இப்போது ஜி.எஸ்.டி. வரியே இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.






