டெல்லியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் விழா - பிரதமர் பங்கேற்பு


டெல்லியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் விழா - பிரதமர் பங்கேற்பு
x

FILPIC

தமிழர்களின் வீரக் கலைகளான சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கும் இவ்விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தின் மிகுந்த உற்சாகத்துடன், நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பண்டிகையாக இருப்பது பொங்கல் பண்டிகையாகும். அனைத்து வீடுகளிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், உறவினர்களும் இணைந்து, தமிழர்களின் பாரம்பரிய மரபுகளை நினைவுபடுத்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படும்.

இந்தநிலையில், மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை மந்திரி டாக்டர் எல். முருகன், ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் விழாவைத் தமிழர்களின் பாரம்பரியம் மாறாமல் கொண்டாடி வருகிறார். 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த விழாவில், முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கம். இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் பிரதமருடன் இணைந்து துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் 14-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறவுள்ள இந்தப் பொங்கல் விழாவிற்காக, மத்திய இணை மந்திரி எல். முருகனின் இல்லம் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுத் தமிழகக் கிராமிய மணம் கமழும் வகையில் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பங்கேற்று, மண்பானையில் பொங்கலிடும் நிகழ்வைப் பார்வையிட உள்ளார். அவருடன் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

தமிழர்களின் வீரக் கலைகளான சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கும் இவ்விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே போன்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றியதுடன், சிறுதானியங்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பேசியது குறிப்பிடத்தக்கது. தேசியத் தலைநகரில் தமிழ்ப் பண்பாட்டை உலகறியச் செய்யும் இந்த நிகழ்வில், டெல்லி வாழ் தமிழர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழா மூலம் தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் ஒற்றுமையைப் பிரதமர் மீண்டும் ஒருமுறை பறைசாற்ற உள்ளார்.

1 More update

Next Story