இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்

4 நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருவனந்தபுரம்,
ஜனாதிபதி திரௌபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப் பயணமாக நேற்று மாலை கேரளா வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த அவரை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து சாலை மார்க்கமாக ஆளுநர் மாளிகைக்கு சென்ற திரௌபதி முர்மு இரவில் அங்கு ஓய்வெடுத்தார். அதன்பின்னர், சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டார். மோசமான வானிலை காரணமாக நிலக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்க வேண்டிய ஹெலிகாப்டர், பிரமாடம் என்ற இடத்தில் தற்காலிகமாக தயார் செய்யப்பட்ட ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது.
பின்னர் அங்கிருந்து பம்பை கணபதி கோயிலுக்கு கார் மூலம் ஜனாதிபதி புறப்பட்டுச் சென்றார். பம்பையில் இருந்து இருமுடி கட்டி சன்னிதானத்திற்கு சிறப்பு வாகனத்தில் திரௌபதி முர்மு சென்றார். இதைத்தொடர்ந்து 18ஆம் படி ஏறி சபரிமலை ஐயப்பனை ஜனாதிபதி தரிசனம் செய்தார். ஜனாதிபதி வருகை காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.






