தலைமை ஆசிரியை கன்னத்தில் அறைந்ததால் மாணவி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு - உறவினர்கள் சாலை மறியல்

மாணவியின் சடலத்தை வைத்து தெஹ்ரி பந்தாரியா சாலையில் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமை ஆசிரியை கன்னத்தில் அறைந்ததால் மாணவி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு - உறவினர்கள் சாலை மறியல்
Published on

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் திவ்யா குமாரி என்ற மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த செப்டம்பர் 15-ந்தேதி மாணவி திவ்யா குமாரி, பள்ளிக்கு செருப்பு அணிந்து சென்றுள்ளார். அந்த பள்ளியின் விதிமுறைகளின்படி மாணவர்கள் ஷூ அணிந்துதான் செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் செருப்பு அணிந்து அதிகாலை அசெம்ப்ளி கூட்டத்தில் பங்கேற்ற மாணவி திவ்யா குமாரியை, பள்ளியின் தலைமை ஆசிரியை திரவுபதி மின்ஸ் கண்டித்ததாகவும், கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் மாணவிக்கு உடனடியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் அடுத்த சில தினங்களில் மாணவிக்கு தீவிர மன உளைச்சல் ஏற்பட்ட நிலையில், அதன் பிறகு அவரது உடல்நலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவி திவ்யா குமாரியின் பெற்றோர் அவரை ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். தலைமை ஆசிரியை கன்னத்ததால்தான் மாணவி திவ்யா குமாரி உயிரிழந்துவிட்டார் என மாணவியின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து மாணவியின் சடலத்தை எடுத்துக் கொண்டு தெஹ்ரி பந்தாரியா சாலைக்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com