பாகிஸ்தான் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்... அமெரிக்காவை நிராகரித்த இந்தியா: வெளியான புதிய தகவல்

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 11 May 2025 10:10 AM IST
மழைக்காலத்திற்கு முந்தைய விலங்குகள் கணக்கெடுப்பு பணி
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடைகாலம் மற்றும் குளிர் காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் மழைக்காலத்திற்கு முந்தைய விலங்குகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கி 17ம் தேதி வரை நடக்க உள்ள கணக்கெடுப்பில் 186 களப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- 11 May 2025 10:02 AM IST
மதுரை வந்தார் கள்ளழகர்
சித்திரைத் திருவிழாவையொட்டி தங்க பல்லக்கில் பக்தர்கள் புடைசூழ அழகர் கோயிலில் இருந்து மதுரை வந்தார் கள்ளழகர். பொய்க்கரைப்பட்டி அப்பன் திருப்பதி கள்ளந்திரி கடச்சனேந்தல் வழியாக மதுரை மூன்றுமாவடி வந்த அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மண்டபங்களில் எழுந்தருள்கிறார். சிறப்பு பூஜைகளும் நடக்கின்றன.
- 11 May 2025 9:59 AM IST
காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்,
காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க பரிந்துரையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டதற்கு நன்றி எனவும் கூறியுள்ள டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த தலைமைகளை நினைத்து பெருமைப்படுகிறேன் எனவும் கூறியுள்ளார். இந்தியா, பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
- 11 May 2025 9:08 AM IST
ராணுவ வீரர்கள் குறித்து பேசியதற்கு அதிமுக முன்னாள் செல்லூர் ராஜு விளக்கம்
செல்லூர் ராஜு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“இன்று (அதாவது நேற்று) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இரவு பகல் பார்க்காமல் நாட்டுக்காக பாடுபடும் நம்ம ராணுவ வீரர்களை மதிக்காமல் பேசியதாக வந்துள்ள செய்திகள் தவறு. ராணுவ வீரர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே பாராட்டியுள்ளார், எங்க குடும்பமே முன்னாள் ராணுவ வீரர்களை கொண்டது இன்று நேற்று நாளை எப்பொழுதும் மதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
- 11 May 2025 9:05 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி, நீர் வரத்து விநாடிக்கு 876 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 108.19 அடியாகவும், நீர் இருப்பு 75.856 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
- 11 May 2025 9:04 AM IST
இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் தரப்பு தலையிடுவது ஏன்? - ஓவைசி கேள்வி
இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியதாவது:-
பாகிஸ்தான் தனது மண்ணை, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு பயன்படுத்துவதை நிறுத்தும் வரை நிரந்தர அமைதி என்பதே கிடையாது. சண்டை நிறுத்தம் இருக்கிறதோ இல்லையோ, பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை நாம் விடக்கூடாது
1972 சிம்லா ஒப்பந்தத்தில் இருந்து, இந்தியா - பாக். விவகாரத்தில் மூன்றாம் தரப்பு தலையிடுவதை நாம் எப்போதுமே விரும்பியது இல்லை. இப்போது ஏன் ஏற்க வேண்டும்?. பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் இனி துணை போகாது என அமெரிக்கா உத்தரவாதம் கொடுக்கிறதா? என்று தெரிவித்துள்ளார்.
- 11 May 2025 9:00 AM IST
வங்கதேச விடுதலையில் முக்கிய பங்காற்றிய அவாமி லீக் கட்சிக்கு தடை விதிப்பு
வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்து தற்போதைய இடைக்கால அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய கட்சியின் செயல்பாடுகளை முடக்கியது சட்ட விரோதம் என அக்கட்சி தெரிவித்துள்ளது. கடந்தாண்டு நடந்த நாட்டை விட்டு தப்பி, இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா மீதும் அங்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
- 11 May 2025 8:59 AM IST
- கன்னியாகுமரி: வார இறுதி நாளான இன்று சூரிய உதயத்தை காண கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
- சன்ரைஸ் பாயின்ட், திரிவேணி சங்கமம், குமரி பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசல், வாவுத்துறை தூண்டில் வளைவு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால் கடைகளின் வியாபாரமும் களைகட்டியுள்ளது














