விபி-ஜி ராம் ஜி மசோதா மக்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறித்துள்ளது - கனிமொழி எம்.பி

வி.பி.ஜி. ராம் ஜி மசோதா இந்தியாவின் கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது என கனிமொழி எம்.பி கூறினார்.
புதுடெல்லி,
புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதாவை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) மாற்றாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மக்களவையில் இந்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், விபி-ஜி ராம் ஜி மசோதா மக்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறித்துள்ளதாக கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது;
”வி.பி.ஜி. ராம் ஜி மசோதா இந்தியாவின் கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது. இது மக்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறித்துள்ளது. இந்த மசோதா தேவை அடிப்படையிலான மசோதாவாகக் கொண்டுவரப்பட்டது, ஆனால் இன்று, இதை ஒதுக்கீடு அடிப்படையிலான மசோதாவாக மாற்றிவிட்டார்கள். வேலைவாய்ப்பு வழங்குவதா இல்லையா என்பதையும், எந்த மாவட்டம் அல்லது மாநிலத்திற்கு ஒதுக்கீடு கிடைக்கும் அல்லது கிடைக்காது என்பதையும் அரசே முடிவு செய்யும். இந்த மசோதா மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கிறது.”
இவ்வாறு அவர் கூறினார்.






