எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 துணைத்தேர்வு    எழுத விண்ணப்பிக்கலாம்
x

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 துணைத்தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 துணைத்தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி கூறியுள்ளார்.

புதுவை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

துணைத்தேர்வு

ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 துணைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்களிடம் இருந்தும், கடந்த மே மாதம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வெழுதி தோல்வியடைந்த, வருகை புரியாத மாணவர்களிடம் இருந்தும் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 தேர்வுகளை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை எழுத அவர்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று திங்கட்கிழமை முதல் ஜூலை 4-ந்தேதி வரையிலான நாட்களில் (3-ந்தேதி நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம்...

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு புதிதாக விண்ணப்பிக்கும் தகுதியுள்ள தனித்தேர்வர்கள் தோல்வியுற்ற பாடங்களுடன், பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களும் அதே நாட்களில் புதுச்சேரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிளஸ்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் முத்திரையர்பாளையம் இளங்கோவடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பெண்கள் செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியிலும் விண்ணப்பிக்கலாம்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் (ஆண்கள்), கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் (பெண்கள்) விண்ணப்பிக்கலாம்.

கடந்த ஆண்டுகளில் நேரடி தனித்தேர்வர்களாக பிளஸ்-1 தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள் அனைவரும் தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுவதற்கும், பிளஸ்-1-ல் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கட்டணம் ரூ.125. ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ.60 ஆகும்.

தோல்வியுற்ற பாடங்கள்

ஏற்கனவே பிளஸ்-2 தேர்வெழுதி தோல்வியுற்ற பாடங்களை எழுதுபவர்கள் மற்றும் பிளஸ்-1 தோல்வியுற்ற பாடங்களை எழுதுபவர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 வீதம் தேர்வுக்கட்டணம், அதனுடன் இதர கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும். மேலும் ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ.50 ஆகும்.

பிளஸ்-2 தேர்வினை முதல்முறையாக எழுத உள்ளவர்கள் தேர்வுக்கட்டணமாக ரூ.150-ம், இதர கட்டணமாக ரூ.35-ம் என மொத்தம் ரூ.185 செலுத்த வேண்டும். கட்டணங்களை சேவை மையத்திலோ, பள்ளியிலோ பணமாக செலுத்தவேண்டும்.

மேற்கூறிய காலகட்டத்துக்குள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் உரிய கட்டண தொகையுடன் ஜூலை 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.500 ஆகும். பிளஸ்-2 தேர்வுக்கு சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1000 ஆகும். தேர்வு குறித்த விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். மேலும் தேர்வுகளுக்கான கால அட்டணவனைகளையும் அதே இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story