கவனக்குறைவான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.3½ லட்சம் நஷ்டஈடு

கவனக்குறைவான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.3½ லட்சம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி
கவனக்குறைவான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.3½ லட்சம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நீர்க்கட்டி
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை அடுத்த நடுக்குப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். அவரது மனைவி அமுதா (வயது 53). இவருக்கு கடந்த 2006-ம் ஆண்டு வலது கால் முட்டியின் பின்புறம் நீர்க்கட்டி ஏற்பட்டுள்ளது.
இதனை சரிசெய்ய இவர், புஸ்சி வீதியில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் ஒருவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து அவரை கடந்த 6-9-2006 அன்று தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து நீர்க்கட்டியை நீக்குவதற்கான சிகிச்சையை மேற்கொண்டார். ஆனால் அவரது வலது கால் பாதத்தின் முன்பகுதி செயல்படாமல் காலை இழுத்து நடக்கவேண்டிய நிலை உருவானது.
அறுவை சிகிச்சை
இதனால் அதிர்ச்சியடைந்த அமுதா 2007-ம் ஆண்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். தனியார் டாக்டரின் கவனக்குறைவு மற்றும் சேவை குறைபாடு காரணமாக தனக்கு பல்வேறு கஷ்டங்கள் மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி புதுவை நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் (நுகர்வோர் கோர்ட்டு) வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை மாவட்ட நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.
ரூ.3½ லட்சம் நஷ்டஈடு
அதில் மருத்துவ சிகிச்சையில் கவனக்குறைபாடு உள்ளதாக கருதி அமுதாவுக்கு ரூ.2 லட்சத்துக்கு 50 ஆயிரமும், மன உளைச்சல் மற்றும் பாதிப்புக்கு ரூ.1 லட்சமும், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது.
தீர்ப்பின் நகலை பெற்ற 45 நாட்களுக்குள் அமுதாவுக்கு நஷ்டஈடு வழங்காவிட்டால் தீர்ப்பு தொகைக்கு ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.