வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்

காரைக்கால்
காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காரைக்கால் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சலுடன் கூடிய புற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. முக்கியமாக குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது வழக்கமாக பருவநிலை மாற்றத்தினால் வரக்கூடிய காய்ச்சல் தான். இந்த காய்ச்சல் நம் மாவட்டத்தில் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களிலும் பரவலாக காணப்படுகிறது.
கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும் காலங்களில் இயல்பாக வரக்கூடிய ஒரு வகை காய்ச்சல் தான். எனவே பொதுமக்கள் யாரும் இந்த காய்ச்சல் குறித்து அச்சப்பட தேவையில்லை. இந்த காய்ச்சல் 4 அல்லது 5 நாட்களில் தானாகவே சரியாகக் கூடியது. இருப்பினும் அதிகப்படியான காய்ச்சல், இருமல், உடல் வலி இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனை, டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். சுய மருத்துவத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும், வைரஸ் கிருமிகள் நம் சுவாசப் பாதையில் நுழையாமல் இருக்க, அனைவரும் முக கவசம் அணிவது அவசியம். மேலும் கைகளை சோப்புப் போட்டு கழுவவும், சுத்தமான உணவுப் பொருட்களை சூடாக உட்கொள்ளவும் வேண்டும். குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். காய்ச்சல் உள்ள குழந்தைகளை பள்ளிக்கும், பொதுவெளிக்கும் அனுப்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






