மறுகூட்டல், நகல் பெற விண்ணப்பிக்கலாம்

புதுச்சோியில் தொடக்கக்கல்வி பட்டய தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல், நகல் பெற விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் பயிற்சி மையம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி
புதுவை மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடந்த தொடக்கக்கல்வி பட்டய தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. மாணவ, மாணவிகள் தங்களது விடைத்தாள்களை மறுகூட்டல் செய்யவும், நகல் பெறவும் விண்ணப்பிக்க விரும்பினால் www.dge.tn.gov.in என்ற முகவரியில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அந்த விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள கட்டண தொகையை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்தி ஆன்லைன் மூலம் வருகிற 3-ந்தேதி காலை 11 மணி முதல் 5-ந்தேதி மாலை 5 மணிவரை பதிவேற்றம் செய்யலாம்.
தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விடைத்தாள்களின் நகல் வேண்டி விண்ணப்பித்த தேர்வர்கள் மட்டுமே பின்னர் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலும். தற்போது மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் தேர்வர்கள் பின்னர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலாது. விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.275-ம், விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.205-ம் செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






