சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை


சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை
x
தினத்தந்தி 16 Sep 2023 1:46 PM GMT (Updated: 16 Sep 2023 1:49 PM GMT)

சட்டமன்ற கட்டிட நில விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்வதாக சபாநாயகர் செல்வம் கூறினார்.

புதுச்சேரி

சட்டமன்ற கட்டிட நில விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்வதாக சபாநாயகர் செல்வம் கூறினார்.

புதுவை சபாநாயகர் செல்வம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சி.பி.ஐ. விசாரணை

வைத்திலிங்கம் எம்.பி.யும், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியும் தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறி வருகிறார்கள். வைத்திலிங்கம் எம்.பி.யின் வேண்டுகோளுக்கிணங்க புதிய சட்டசபை கட்டுவதற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விடுவித்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த பரிந்துரை செய்கிறேன்.

இதுதொடர்பான ஏற்பாடுகளை செய்ய சட்டசபை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். புதிய சட்டசபை கட்டுவதற்கான நிலத்தை ஆர்ஜிதம் செய்வதற்கான பணிகள் கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு அமைச்சரவையில் முடிவ செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மறைத்து பேசுகிறார்

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடர் நடவடிக்கை எடுத்து வந்தார். ஆனால் அப்போது கவர்னராக இருந்த முகுத்மிதி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அந்த பணிகள் கிடப்பில் இருந்தன.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு நாராயணசாமி முதல்-அமைச்சராகவும், வைத்திலிங்கம் சபாநாயகராகவும் இருந்தபோதுதான் நிலம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாற லஞ்சம்

ஆனால் அதை மறைத்து வைத்திலிங்கம் எம்.பி. பேசிவருகிறார். எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாற ரூ.9½ லட்சம் லஞ்சம் கொடுத்த வழக்கின்போது அவர் எப்படி எல்லாம் நடந்துகொண்டார் என்பதை புதுச்சேரி மக்கள் நன்கறிவார்கள்.

இவ்வாறு சபாநாயகர் செல்வம் கூறினார்.


Next Story