சலூன் கடையில் திருட முயன்ற சென்னை வாலிபர் கைது


சலூன் கடையில் திருட முயன்ற  சென்னை வாலிபர் கைது
x

கோட்டுச்சேரி அருகே சலூன் கடையில் திருட முயன்ற சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டுச்சேரி

கோட்டுச்சேரி ஜீவா நகரை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 40). இவர் காரைக்கால் சின்னக்கண்ணு தெருவில் சலூன் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு கடையை மூடிவிட்டு ஆரோக்கியதாஸ் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. ஆனால் பொருட்கள் எதுவும் திருட்டு போகாமல் இருந்தது.

இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் கடைக்குள் புகுந்து திருட முயற்சிப்பதும், ஆள் நடமாட்டம் இருந்ததால் திருடாமல் சென்றதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் காரைக்கால் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர் குறித்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் போலீசாரின் ரோந்து பணியில் சந்தேகப்படும் படியாக இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த பழைய குற்றவாளி கவுதம் (23) என்பதும், வேளாங்கண்ணிக்கு வந்த இடத்தில் செலவுக்கு பணம் இல்லாததால் சலூன் கடைக்குள் புகுந்து திருட முயன்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து கவுதமை போலீசார் கைது செய்தனர்.


Next Story