விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்


விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்
x

புதுவையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கோஷ்டிகளாக மோதிக் கொண்டதில் 7 பேர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கலைத்து ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தினர்.

புதுச்சேரி

புதுவையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கோஷ்டிகளாக மோதிக் கொண்டதில் 7 பேர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கலைத்து ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தினர்.

விநாயகர் சதுர்த்தி விழா

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரியிலும் பல்வேறு இடங்களில் இந்து முன்னணியினர் சார்பில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் சாரம் அவ்வை திடலில் 21 அடி உயர சிலை வைக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

விநாயகர் சதுர்த்தி முடிந்து 5-வது நாளில் இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் வாகனங்களில் தனித்தனியாக அந்தந்த பகுதியில் இருந்து சாரம் அவ்வை திடலுக்கு இன்று மதியம் கொண்டு வரப்பட்டன.

அங்கு சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஊர்வலம் தொடங்கியது. மேளதாளத்துடன் புறப்பட்ட விநாயகர் ஊர்வலம் காமராஜர் சாலை, நேரு வீதி, காந்தி வீதி அஜாந்தா சந்திப்பு அருகே ஊர்வலம் வந்து கொண்டிருந்தது.

கோஷ்டி மோதல்- தடியடி

அப்போது முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகர் டோபிகானா பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையும், மதுரை வீரன் கோவில் தெருவில் வைக்கப்பட்டு இருந்த சிலையும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

டோபிகானா பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சிலையின் முன்பு விஷ்வா ஆதித்யா (வயது 21), அருண், சஞ்சய், அய்யனார் உள்பட பலர் சென்றனர். மதுரை வீரன் கோவில் தெரு சிலையின் முன்பு அசோக் (21), வசந்த் (23), சூர்யா (16) மற்றும் சிலர் சென்றனர். காந்திவீதியில் பெருமாள் கோவில் தெருவை தாண்டி சென்ற போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களாலும், கைகளாலும் தாக்கிக்கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லேசாக தடியடி நடத்தி மோதலை கட்டுப்படுத்தினர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த விஷ்வா ஆதித்யா, அருண், சஞ்சய், அய்யனார், அசோக், வசந்த், சூர்யா ஆகிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.

போலீசார் அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருதரப்பினர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டதால் விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

கிரேன் உதவியுடன் கரைப்பு

இதற்கிடையே தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலம் பட்டேல் சாலை வழியாக கடற்கரை சாலையில் பழைய கோர்ட்டு முன்பு வந்தடைந்தது. கடற்கரை சாலைகளில் பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் வாகனங்களில் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இதனை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கடற்கரையில் குவிந்திருந்தனர்.

அங்கு நடந்த சிறப்பு பூஜையில் சபாநாயகர் செல்வம், பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர். கடலில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு வசதியாக பாறாங்கற்களில் மண் கொட்டப்பட்டு சாய்தள அமைப்பு உருவாக்கப்பட்டு இருந்தது. அங்கு விநாயகர் சிலைகள் ஒவ்வொன்றாக கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து 2 ராட்சத கிரேன் மூலமாக விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

பாதுகாப்பு காரணமாக விநாயகர் சிலை கரைக்கும் பகுதியில் போலீசார் தடுப்பு வேலி அமைத்திருந்தனர். பொதுமக்கள் தூரத்தில் நின்றபடி செல்போன்களில் விநாயகர் சிலைகளை படம் எடுத்தனர்.

போக்குவரத்து மாற்றம்

விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது புதுவை நகர பகுதியில் நெரிசலை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஒருசில இடங்களில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஊர்வலம் செல்லும் பாதையில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது நடந்த மோதல் தொடர்பாக பெரியகடை போலீசார் இரு தரப்பினரையும் சேர்ந்த சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இன்று வெள்ளிக்கிழமை என்பதால் சுமார் 50 சிலைகள் மட்டுமே கரைக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள சிலைகள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கரைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story