பாகூர் மின்துறை அலுவலகத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை


பாகூர் மின்துறை அலுவலகத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
x

மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பாகூர் மின்துறை அலுவலகத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டனர்.

பாகூர்

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாகும் கொள்கை மற்றும் பிரீபெய்ட் திட்டத்தை எதிர்த்தும், மின் கட்டணத்தை பாதியாக குறைக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் (மார்க்சிஸ்ட்) பாகூர் மின்துறை அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று பாகூர் கடைவீதி பூலோக மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக மின்துறை அலுவலகம் எதிரே வந்தனர். அங்கு அவர்கள் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு கட்சியின் பாகூர் கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். கமிட்டி உறுப்பினர் ஹரிதாஸ், வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், தமிழ்ச்செல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த போராட்டத்தில் 80-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.


Next Story