பெரிய மார்க்கெட்டை 2 பிரிவுகளாக கட்ட ஒப்புதல்


பெரிய மார்க்கெட்டை 2 பிரிவுகளாக கட்ட ஒப்புதல்
x

புதுவை பெரிய மார்க்கெட் கட்டுமான பணிகளை 2 பிரிவுகளாக மேற்கொள்ள முதல்- அமைச்சர் ரங்கசாமி ஒப்புக்கொண்டார்.

புதுச்சேரி

புதுவை பெரிய மார்க்கெட் கட்டுமான பணிகளை 2 பிரிவுகளாக மேற்கொள்ள முதல்- அமைச்சர் ரங்கசாமி ஒப்புக்கொண்டார்.

ரங்கசாமியுடன் சந்திப்பு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதுவை பெரிய மார்க்கெட் கடைகள் முழுமையாக இடித்துகட்ட அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அரசு சார்பில் சபாநாயகர் செல்வம் வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அரசு தரப்பிலும் வியாபாரிகள் தரப்பிலும் கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இறுதியில் வியாபாரிகள் தங்களுக்குள் கூடிபேசி முடிவெடுத்து வருவதாக கூறினார்.

இந்தநிலையில் அவர்கள் சபாநாயகர் செல்வத்துடன் சென்று முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின்போது எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர். அப்போது அவர்கள் தங்களது முடிவு தொடர்பான மனுவினை முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் வழங்கினார்கள்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வாடகையை உயர்த்தக்கூடாது

பெரிய மார்க்கெட்டில் கடை வைத்து வியாபாரம் செய்யக்கூடிய வியாபாரிகள் பெயரில் கடைகளை பெயர் மாற்றம் செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கடைகளை இடித்துகட்டிய பிறகு பழைய வாடகையை உயர்த்தாமல் தொடர்வதற்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும்.

அடிக்காசு கடைகளுக்கு பழைய முறையிலேயே கட்டணம் வசூலிக்க உத்தரவாதம் தர வேண்டும். கட்டுமான பணிகளை 4 பிரிவுகளாக பிரித்து கட்டுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கட்டுமான பணியை தொடங்கும் முன்பு பழைய சிறைச்சாலை பகுதியில் தற்காலிக கடைகள் அமைத்துத்தர வேண்டும். அடிக்காசு வியாபாரிகள், பழக்கடை வியாபாரிகளுக்கும் இடம் ஒதுக்கி தரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

2 பிரிவுகளாக...

மனுவினை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி, வியாபாரிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாகவும், கட்டுமான பணிகளை 4 பிரிவுகளாக அல்லாமல் 2 பிரிவுகளாக கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து சென்றனர்.


Next Story