14 ஊழியர்கள் பணியிடை நீக்கம்


14 ஊழியர்கள் பணியிடை நீக்கம்
x

புதுவை தட்டாஞ்சாவடியில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.

புதுச்சேரி

புதுவை தட்டாஞ்சாவடியில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.

தொடர் போராட்டம்

இங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 8 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். 81 முழுநேர தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.

தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூடம் தொடர்ந்து அந்த பகுதியிலேயே செயல்பட வேண்டும். அதாவது, அங்கு வருவதாக அறிவித்த சட்டசபை வளாகம் கட்ட கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் நேற்று தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இந்த போராட்டம் பழைய பஸ்நிலையம், லாஸ்பேட்டை உழவர்சந்தை, தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று காலை தொடங்கியது.

சங்க தலைவர் பாஸ்கர் பாண்டியன், செயலாளர் சண்முகம் ஆகியோர் தலைமை தாங்கினர். பொருளாளர் பழனிசாமி, செயல்தலைவர் அபிஷேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுசெயலாளர் சேது செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உழவர்சந்தை மூடல்

இந்த போராட்டம் காரணமாக லாஸ்பேட்டை உழவர்சந்தை திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்தது. எனவே, விவசாயிகள் தங்களுக்கு தராசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உழவர்சந்தை அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகளுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து லாஸ்பேட்டை போலீசார் அங்கு சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் விவசாயிகள் சாலையோரம் அமர்ந்து காய்கறிகளை வியாபாரம் செய்தனர்.

ஒதியஞ்சாலை பழைய பஸ்நிலையம் அருகே உள்ள உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு டோக்கன், தராசு பட்டியல், விலைப்பட்டியல் வழங்கப்படவில்லை. இருப்பினும் விவசாயிகள் வழக்கம் போல் கடைகளை அமைத்து வியாபாரம் மேற்கொண்டனர். பொதுமக்களும் வழக்கம் போல் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.


Next Story