தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை
காரைக்கால், அரியாங்குப்பத்தில் தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.
காரைக்கால்
காரைக்கால், அரியாங்குப்பத்தில் தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.
ஈஸ்டர் பண்டிகை
ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்து, 3-ம் நாள் உயிர்ப்பித்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். நேற்று நள்ளிரவு, ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
அதன்படி காரைக்கால் புனித தேற்றரவு அன்னை ஆலயம் சார்பில் நிர்மலாராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நள்ளிரவு ஈஸ்டர் கொண்டாடப்பட்டது.
ஏசு உயிர்த்தெழுதல்
ஆலய பங்குத்தந்தை அந்தோணிராஜ் தலைமையில் ஈஸ்டர் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நள்ளிரவு 12.05 மணிக்கு ஏசு கல்லறையில் இருந்து உயிர்த்தெழும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பட்டாசு சத்தம் மற்றும் புகைமூட்டத்துக்கு மத்தியில் ஏசு உயிர்த்தெழும் நிகழ்ச்சி தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து பங்கு மக்களின் குழந்தைகளுக்கு ஞானஸ்தானம் வழங்கப்பட்டது.
விழாவின் முடிவில், பங்குத்தந்தையர்கள் ஏற்றிய மெழுகுவர்த்தியில் இருந்து பங்குமக்கள் தங்கள் மெழுவர்த்தியில் தீபம் ஏற்றி, பங்குத்தந்தை மந்திரித்த புனித நீரை, தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்றனர்.
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பங்குத்தந்தை அந்தோணி ரோச் தலைமையில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் கந்தர்வகோட்டை கார்மேல் சபை பங்குத்தந்தை அமல்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தீபம் ஏற்றி வைத்து ஏசு உயிர்த்தெழுதலை சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பங்கு மக்கள், கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.