கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து


கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து
x

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழிசை சவுந்தரராஜன்

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

மனித குலத்துக்கு தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா காலத்தில் முதல்நிலை களப்பணியாளர்களாக பணியாற்றி பெருந்தொற்றின் கோரப்பிடியில் இருந்து மனித உயிர்களை காப்பாற்றியதற்காக மருத்துவ சமுதாயத்துக்கு நன்றி சொல்வதற்கு ஏற்ற தருணம் இது.

தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் நோயாளிகளின் உயிரை காப்பாற்றி மருத்துவர்களின் கடமை உணர்வை மீண்டும் நிலைநாட்டி இருக்கிறார்கள். நம் அனைவரது வாழ்விலும் மருத்துவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை கொரோனா வெளிப்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ந்தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தன்னலமற்ற, ஈடு இணையில்லாத சேவையை போற்றுகின்ற, மதிக்கின்ற அதேவேளை நம்முடைய உயிர்களை காப்பாற்றும் மருத்துவர்களையும், பாதுகாக்க வேண்டியதும் நமது கடமை என்பதை அனைவரும் உணரவேண்டும்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

ரங்கசாமி

முதல்-அமைச்சர் ரங்கசாமி விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

உயிர் காக்கும் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளதால்தான் மருததுவர்கள் வாழும் கடவுளாக மதிக்கப்படுகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி குடும்பத்தை பிரிந்து தன்னலமற்று, தங்களது உயிரையும் பொருட்படுத்தாது அவர்கள் ஆற்றிய சேவை போற்றுதலுக்குரியது.

இந்த தேசிய மருத்துவர்கள் தினத்தில் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.


Next Story