சலுகையில் வாங்கிய பீர் பாட்டிலில் காகிதம்


தினத்தந்தி 22 Jun 2023 4:58 PM GMT (Updated: 23 Jun 2023 7:44 AM GMT)

பாகூர் அருகே சலுகையில் வாங்கிய பீர் பாட்டிலில் காகிதம் இருந்ததால் மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாகூர்

புதுச்சேரி-கடலூர் எல்லை பகுதியான முள்ளோடையில் தனியார் மதுபான பார் உள்ளது. இங்கு மதுபிரியர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் 2 பீர் வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையறிந்த கிருமாம்பாக்கத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகள் 2 பேர் பீர் குடிக்க சென்றனர். அவர்கள் பணம் கொடுத்து 2 பீர் பாட்டில்கள் வாங்கினர். அவர்களுக்கு சலுகையாக மேலும் ஒரு பீர் பாட்டில் வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் 2 பீர் பாட்டில்களை திறந்து குடித்தனர். அதன் பின் சலுகையில் வாங்கிய 3-வது பீரை குடிப்பதற்காக கையில் எடுத்தனர். அப்போது பாட்டிலின் உள்ளே தினசரி காலண்டர் காகிதம் பீரில் மிதந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், பார் ஊழியர்களிடம் சென்று கேட்டனர். ஆனால் அவர்கள் சரியான பதில் தெரிவிக்காமல், இதனை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசாரிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர். பீர் பாட்டிலில் காகிதம் கிடந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.


Next Story