அண்ணா சிலைக்கு, அரசியல் கட்சியினர் மரியாதை


அண்ணா சிலைக்கு, அரசியல் கட்சியினர்  மரியாதை
x

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

புதுச்சேரி

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ரங்கசாமி மாலை

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அண்ணா சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமிகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

தி.மு.க.-அ.தி.மு.க.

மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. தலைமையில் ரோடியர் மில் மைதானத்தில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜே.வி.எஸ்.ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் உப்பளத்தில் உள்ள தலைமை கழகத்தில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அங்கிருந்து அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை செயலாளரான முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர், இணை செயலாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு, பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணை செயலாளர்கள் குணசேகரன், எம்.ஏ.கே.கருணாநிதி, நாகமணி, குமுதன் காந்தி, மேற்கு மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் தலைமையில் நெல்லித்தோப்பில் இருந்து ஊர்வலமாக வந்து அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.ம.மு.க.வினர் முன்னாள் எம்.எல்.ஏ. யூ.சி.ஆறுமுகம், எஸ்.டி.சேகர் ஆகியோர் தலைமையிலும், திராவிடர் கழக மாநில தலைவர் சிவ.வீரமணி, புதிய நீதிக்கட்சி மாநில தலைவர் பொன்னுரங்கம் ஆகியோர் தலைமையிலும் தனித்தனியாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story