தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
x

‘வைட்டிங் பார் மை டெத்' என நண்பரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருநள்ளாறு

'வைட்டிங் பார் மை டெத்' என நண்பரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தனியார் நிறுவன ஊழியர்

திருநள்ளாறு நளன்தெருவை சேர்ந்தவர் சண்முகம். திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் (வயது 22). இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதிலிருந்து விடுபட கடந்த 4 மாதங்களுக்கு முன் புதுச்சேரியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் சென்னையில் உள்ள தனியார் செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். விடுமுறையில் காரைக்கால் வந்த விக்னேஷ், தனக்கு அந்த வேலை பிடிக்கவில்லை என குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். மேலும் அவர் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

கடந்த 1-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதையடுத்து சண்முகம், விக்னேசுக்கு போன் செய்து, வீட்டுக்கு சீக்கிரம் வருமாறு கண்டித்ததாக கூறப்படுகிறது. விக்னேஷ் வீட்டுக்கு வராததால், குடும்பத்தினர் இரவு தூங்கி விட்டனர்.

இந்த நிலையில் இ்ன்று அதிகாலை 2 மணிக்கு மின்தடை ஏற்பட்டதால் சண்முகம் எழுந்து பார்த்தபோது, விக்னேஷ் வீட்டு மாடிக்கு செல்லும் வழியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையில் அவரது நண்பர்களும் அங்கு வந்தனர்.

நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு

அவர்களிடம் சண்முகம் விசாரித்தபோது, நள்ளிரவு 2 மணியளவில் தங்கள் வீட்டில் விக்னேஷை இறக்கிவிட்டு சென்றதாகவும், சிறிது நேரத்தில், அவர் செல்போனில் இருந்து 'வைட்டிங் பார் மை டெத்' என வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்தி வந்ததாகவும், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இங்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து சண்முகம் அளித்த புகாரின்பேரில் திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனஉளைச்சல் காரணமாக விக்னேஷ், தனது நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


Next Story