சமுதாய நலக்கூடம் கட்டிதரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


சமுதாய நலக்கூடம் கட்டிதரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

சமுதாய நலக்கூடம் கட்டிதரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி

சமுதாய நலக்கூடம் கட்டிதரக்கோரி பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

சாலை மறியல்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட செயின்பால் பேட், ஜீவா காலனி பகுதியில் சமுதாய நலக்கூடம் உள்ளது. இது தற்போது இடிந்து விழும் நிலையில் பாழடைந்து போய் உள்ளது. அதனை இடித்து அகற்றி விட்டு புதிதாக சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் சமுதாய நலக்கூடத்தை அகற்றி விட்டு அந்த இடத்தில் நவீன விளையாட்டு கூடம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களுக்கு புதிய சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும் என்று வலியுறுத்தி அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இன்று காலை ஜீவா காலனி ஏர்போர்ட் சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது பற்றி தகவல் அறிந்த கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதன்பேரில், அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story