கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க இடம் தேர்வு
காரைக்காலில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
காரைக்கால்
காரைக்கால் மாவட்டத்தில் செல்வகணபதி எம்.பி. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, காரைக்கால் பரவைபேட்டை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பணிபுரியும் 150-க்கு மேற்பட்ட பெண் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச புடவை வழங்கினர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்காக புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, காரைக்கால் துறைமுகத்தை விரிவுபடுத்தி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், காரைக்காலில் சாமானிய மக்கள் எளிமையாக, தரமான கல்வி கற்பதற்காக, மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடம் பள்ளமாக இருப்பதால் அதனை சமன் செய்வதற்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவுற்று வகுப்புகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.